Local News
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று பது/ விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்கள் சாதனை!
By கஜன்June 20, 2026

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பது/ விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இப்பாடசாலையைச் சேர்ந்த சிவகுமார் தவீர்சன் மற்றும் பிரபாகரன் துஷித் ஆகிய இரு மாணவர்களுமே பரீட்சைக்குத் தோற்றிய அனைத்துப் பாடங்களிலும் மிகச்சிறந்த 'A' தர சித்திகளைப் (9A) பெற்று, தங்களது பாடசாலைக்கும், பதுளை மண்ணிற்கும் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளனர்.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய முறையான வழிகாட்டல்களும், பெற்றோரின் பக்கபலமும், மாணவர்களின் கடின உழைப்புமே இந்த உன்னத வெற்றிக்குக் காரணம் எனப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்கு மத்தியிலும் கல்விப் புலத்தில் தடம் பதித்து, பாடசாலைக்கு கீர்த்தியைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்கள் இருவருக்கும் பாடசாலைச் சமூகம், பழைய மாணவர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.